murali83bdu@gmail.com. Powered by Blogger.

Monday, June 27, 2011

ம.பொ.சி. என்ற மாமனிதர்!

ம.பொ.சி. என்ற மாமனிதர்!

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வீர வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஓயாதுழைத்த உத்தமத்தலைவர் ம.பொ.சி. மூதறிஞர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியபோது, அவருக்கெதிராக எழுந்த புயல் போன்ற எதிர்ப்புக்கு ஈடு கொடுத்தவர் தளபதி ம.பொ.சி அவர்கள். ம.பொ.சிவஞானம் அவர்கள் 1906-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். தந்தையின் பெயர் பொன்னுசாமி. தாயார் பெயர் சிவகாமி. இவரையும் சேர்த்து குடும்பத்தில் மொத்தம் 9 பிள்ளைகள்.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். அதற்கு மேல் படிக்க குடும்பத்தில் பண வசதி இல்லை. எனவே ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்தார். பின்னாளில் ம.பொ.சி தமிழில் சிறந்து விளங்கக் காரணம், இளமையில் அவரது தாயார் சொல்லிக் கொடுத்த அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை போன்ற நூல்களேயாகும். தேவையான அளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இருந்தது.

1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் எதிர்ப்பு, 1932-ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஊர்வலம், ஆங்கில அரசை எதிர்த்து எழுதப்பட்ட துண்டுப் பிரசாரங்களை வழங்கியதற்காகவும், பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலைப் போரில் 1928 முதல் 1947 வரை ஆறு முறை சிறைத் தண்டனை அனுபவித்தார். இன்று மாநில சுயாட்சி பற்றிப் பேசப்படுகிறது. மாநில சுயாட்சி என்னும் தத்துவத்தை முதன் முதலாகச் சிந்தித்து தமிழர்களுக்கு வழங்கிய தலைவர் ம.பொ.சி தான்.

காங்கிரஸின் எதிர்ப்பையும், திராவிடர் கழகத்தின் முயற்சியையும் முறியடிக்கத் "தமிழர் முரசு' என்னும் பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றை 1946-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி தமிழர் மாநிலம் தனியாக பிரித்து அமைக்கப்பட்டது. சென்னையை ஆந்திராக்காரர்கள் உரிமை கொண்டாடாமல் காப்பாற்றப்பட்டது. அதில் பெரும் பங்கு ம.பொ.சி.க்கு உண்டு.

1946-ம் ஆண்டே ம.பொ.சி தமிழகத்துக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று கோரினார். மாநில அரசின் எந்த அதிகாரத்திலும் மத்திய அரசின் மேலாதிக்கம் இருக்கக்கூடாது மாநிலங்களுக்குத் தனியே மாநிலக் கொடி, மாநில கீதம், அரசியலமைப்புச் சட்டம் எல்லாம் இருக்க வேண்டும் என்றார். அதற்கு எடுத்துக் காட்டாக, சோவியத்து யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளை கூறினார்.

அந்த நாளில் தனித் திராவிட நாடு கேட்டவர்கள், மாநில சுயாட்சிக் கொள்கையைக் கேலி பேசினார்கள். நாங்கள் கேட்பது நாலணா, அதில் கிராமணியார் கேட்பது காலணாவாக இருக்கிறது என்றார்கள். பின்னர் திராவிடத் தனி நாடு கோரிக்கை கைவிடப்பட்டு மாநில சுயாட்சி கோரிக்கையை திராவிட இயக்கத்தாரும் ஏற்றுக் கொண்டது காலத்தின் கட்டாயம் என்றார் ம.பொ.சி.


""ம.பொ.சி தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டை வாழ்விப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களுக்காக அவரை நாங்கள் கையெடுத்துக் கும்பிடுகிறோம்'' என்றார் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா.

1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அரும்பாடுபட்டார் ம.பொ.சி. இருப்பினும் பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். காங்கிரஸில் தாம் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஏன் சாதாரண உறுப்பினர் நிலையில் இருந்தும் கூட முற்றிலுமாக விலகிவிட்டார்.

"தமிழன் குரல்' என்ற இதழை 1954-55-ம் ஆண்டுகளில் ம.பொ.சி நடத்தி வந்தார். 1954-இல் சென்னை மாநகராட்சிக் கல்விக் குழுத்தலைவராக இருந்து மாநகராட்சியின் கொடியில் தமிழ் மூவேந்தரின் சின்னங்களாகிய வில், புலி, மீன் போன்ற சின்னங்களைப் பொறித்திடத் தீர்மானித்துப் பிறரையும் ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி பெற்றார்.

"மதராஸ் மனதே' என்று குரலெழுப்பி ஆந்திரர்கள் போராட்டம் செய்தனர். அப்போது மாநில முதலமைச்சராக இராஜாஜி இருந்தார். அவரது ஆதரவுடன் சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகராக நிலைநிறுத்திப் பாதுகாக்க ம.பொ.சி. அரும்பாடுபட்டார். ""தலையைக் கொடுத்து தலைநகரைக் காப்போம், காலைக் கொடுத்து கன்னியாகுமரியைக் காப்பாற்றுவேன்'' என்றார் ம.பொ.சி.

1954-ஆம் ஆண்டில் தேவி குளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்தோடு சேர்க்கப்பட்ட வேண்டும் என்று போராடினார்கள். மூணாறில் நேசமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் தெற்கெல்லைப் போராட்டம் தொடர்ந்தது. மூணாறு, நாகர்கோவிலில் இரண்டு இடங்களிலும் ம.பொ.சி முக்கியப் பங்கு வகித்தார். அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி ஈவு இரக்கமின்றி 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது.
""ம.பொ.சி எந்தப் பணியைச் செய்தாலும், எத்துறையில் நின்றாலும் அவரது பேச்சும், மூச்சும் தமிழுக்காகவே இருக்கும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.

வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதினார். இவர் எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 3.10.1995-ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார். சென்னையில் வாழ்ந்தவர்களுக்கும், தமிழ் மொழியை அறியாதவர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்னையில் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், ஏன் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன் வாழ்க்கையே அர்ப்பணித்துப் பாடுபட்ட அவருக்கு சென்னையில் ஒரு சிலையோ, ஒரு மணிமண்டபமோ, தெருவிற்குப் பெயரோ, நினைவுத் தூணோ வைக்கப்படவில்லை என்பதுதான் வேதனை

ம.பொ. சிவஞானம்

சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு
1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்கு.

அரசியல்
உறுப்பினர், தமிழ் நாடு காரியக்கமிட்டி (1951-52)
துணைச் செயலாளர், சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டி(1936-37)
செயலாளர், சென்னை ஜில்லா காங்கிரசுக் கமிட்டி (1947-48)

தொழிலாளர் இயக்கம்
செயலாளர், சென்னை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் (1934-38)
துணைத் தலைவர், சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கம் (1932-34
துணைத் தலைவர், சென்னை இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் (1937-38)
தலைவர், சென்னை பட்டன் தொழிலாளர் சங்கம் (1936-37) மற்றும்
பல்வேறு தொழிலாளர் சங்கங்களுடன் தொடர்பு

சமூகப் பணி
செயலாளர், வட சென்னை அரிசன சேவா சங்கம் (1934-35)
பிரசாரகர், சென்னை அரிசன சேவா சங்கம் (1934-35)
செயலாளர், கிராமணிகுல மகாஜன சங்கம் (1934-37)
உறுப்பினர், போலீஸ் கமிஷன் (1976-77)
உறுப்பினர், தமிழ் நாடு அரசு பிற்பட்டோர் நலக் குழு (1968-71)
உறுப்பினர், தமிழ் நாடு அரசு கதர் கைத்தொழில் வாரியம்

எழுத்தாளர்
தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் (1955-56)
தலைவர், தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் மாநாடு, சென்னை (1955)
இது வரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

பட்டங்களும் பட்டயங்களும்
1950இல் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது
1966இல் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூல் சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றுள்ளது
1972இல் ஜனாதிபதியிடம் “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.
மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதி சங்கம் ஆகியவற்றிடம் தமிழ்த் தொண்டிற்காக வெள்ளிக் கேடயங்கள் பெற்றார்.
1976இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தாரால் ‘கலைமாமணி’ என்ற பட்டமும்
விருதும் வழங்கப் பெற்றன.
1976இல் சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி
அவர்களால் ‘இயற்றமிழ்ச் செல்வம்' என்ற பட்டம் வழங்கப்பெற்றது.
கல்வித் துறையில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் வகையில் “யுனெஸ்கோ” சார்பில் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘டாக்டர்’ பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகத்தாலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாலும் வழங்கப் பட்டது (1981-82).
1985இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கப் பட்டது.

சிறை வாசம்
1928 முதல் 1947 வரை விடுதலைப் போரில் கலந்து கொண்டு, ஆறு முறை சிறைத் தண்டனை
பெற்றார்.
ஒரு முறை மத்தியப் பிரதேசத்திலுள்ள அமராவதிச் சிறையில் ஒரு ஆண்டுக் காலம்
அடைக்கப்பட்டார்.
தமிழக வடக்கெல்லைக் கிளர்ச்சியைத் தொடங்கி, அதிலே, 1953இல் தணிகையில் ஆறு வாரக்
கடுங்காவல் தண்டனை பெற்றார்.
1936இல் சென்னைச் சிறையில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டார்.

காந்தியப் பணி
கதர் வளர்ச்சி, மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய ஆக்கவழிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1984 முதல் கிண்டி காந்தி மண்டப நினைவு ஆலோசனைக் குழுவின் தலைவர்.

தமிழரசுக் கழகம்
1946 நவம்பரில் தமிழரசுக் கழகம் நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார்.
மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி 1956இல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார்.
தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் ( தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் னெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்.
சென்னை மீது ஆந்திரர் உரிமை கொண்டாடியதை எதிர்த்துப் போராடி, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முழக்கம் செய்து, தலைநகரைக் காத்தார்.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்றப் பணி
ஆல்டர்மேன், சென்னை மாநகராட்சி (1948-55)
உறுப்பினர், சட்டமன்ற மேலவை (1952-54)
உறுப்பினர், சட்டமன்றப் பேரவை (1972-78)
தலைவர், சட்டமன்ற மேலவை (1978-86) (அக்.)

நூலக இயக்கம்
நிர்வாகி, சென்னை இராயபுரம் திருவள்ளுவர் வாசக சாலை (1930-32)
செயலாளர், சென்னை தண்டையார்பேட்டை நூலகம் (1941-42)
தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்க நூலகம்.
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு (1952-54 மற்றும்1972-74)
உறுப்பினர், தமிழ்நாடுஅரசு நூலக ஆணைக்குழு
நூலக இயக்கத்துக்கென தனித் துறையை நிறுவவும் தனி இயக்குநரை நியமிக்கவும் நூலக வரியை
3 காசிலிருந்து 5 காசுகளாக உயர்த்தவும் அரசைத் தூண்டி அதில் வெற்றி கண்டார்.

பல்கலைக்கழகப் பணிகள்
உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக செனட் சபை (1952-54)
உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு (1972-76)
உறுப்பினர், மதுரைப் பல்கலைக்கழக செனட் சபை (1967-69)
உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் சபை (1978)
உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக செனட் சபை
தலைவர், உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகப் பல்வேறு ஆய்வுக்குழுக்கள்.
சென்னை, மதுரைப் பல்கலைக் கழகங்களின் சார்பில் ஆறு முறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் - தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு உறுப்பினர் (1983-86)

கல்வித் தொண்டு
தலைவர், சென்னை மாநகராட்சி கல்விக் குழு (1952-53)
ஆசிரியர், வடசென்னை முதியோர் ( கள்ளிறக்கும் தொழிலாளர்) கல்வி இரவுப் பள்ளி (1934-36)
வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ஆகிய நூல்கள் தமிழ் நாடு உயர்நிலைப் பள்ளிகளின் மேல் வகுப்புகளில் பாடமாக்கப்பட்டன.
‘கம்பன் கவியின்பம்' என்னும் நூல் மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பட்டப் படிப்புக்குப் பாடமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தால் மேல் பட்டப் படிப்புக்குத் தகவல் நூலாக வைக்கப் பட்டது.
‘பாரதியாரின் பாதையிலே' என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.

பத்திரிகைப் பணி
கம்பாசிடர், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு' பத்திரிகை அச்சுக்கூடம் (1927-34)
ஆசிரியர், “கிராமணி குலம்” (1934-37) மாதமிருமுறை
ஆசிரியர், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் “பாரதி ” மாதப் பத்திரிகை (1955-56)
ஆசிரியர், “தமிழ் முரசு” (1946-51)
ஆசிரியர், “தமிழன் குரல்” (1954-55)
ஆசிரியர், “செங்கோல்” (1950-1995)

அயல்நாட்டுப் பயணம்
இலங்கைக்கு 1948இல் முதன் முதலாகச் சென்று 28 நாட்கள் அந்தத் தீவில் சுற்றுலாச் செய்தார். அதன் பின்னரும் 10க்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் சென்று திரும்பியுள்ளார்.
பர்மாவுக்கு 1956இல் சென்று 18 நாட்கள் சுற்றுலா செய்தார்.
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 1964-லும், 1966-லும் சுற்றுலாச் செய்தார்.
மேற்கண்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையில் கலாச்சாரப் பிரச்சாரம் செய்துள்ளார்.
1965 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும் 1970இல் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளில் தமிழக அரசின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
1970 இல் சோவியத் யூனியனால் அழைக்கப்பட்டு, அந்நாட்டில் 7 நாட்கள் சுற்றுலா செய்தார்.
1970இல் பாரிசில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு விட்டுத் திரும்புகையில், பிரிட்டனின் தலைநகரான இலண்டனில் 3 நாட்கள் தங்கி, நூலக இயக்கம் – காவல் துறை நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து வந்தார்.
1986ஆம் ஆண்டில் இலண்டன், அமெரிக்கச் சுற்றுப் பயணம் செய்து, வெர்ஜீனியா மாகாணத்தில் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டார். அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் மூன்று வாரம் சுற்றுப் பயணம் செய்தார்.

தமிழிசைப் பணி
1967 டிசம்பரில், தமிழ்ப்பண் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
1978 டிசம்பரில் சென்னையில் தமிழிசை விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
1982-83 தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மறைவு
1995ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள், சென்னை மயிலாப்பூர்.

Thursday, June 16, 2011

ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்:

இன்று ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்: ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்
சென்னை: சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.

இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. . அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
http://www.dinamalar.com